ஊரடங்கை மீறி மைதானத்தில் விளையாடிய வாலிபர்கள்! போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓட்டம்
சென்னை பூந்தமல்லியில் ஊரடங்கை மீறி மைதானத்தில் விளையாடிய வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இன்று வரை அமலில் உள்ளது. இதன் காரணமாக மருத்துவ தேவைகளை தவிர்த்து பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லி, லட்சுமி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மைதானத்தில் வாலிபர்கள் அதிக அளவில் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலையடுத்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
போலீசார் வருவதை பார்த்த வாலிபர்கள் தாங்கள் விளையாடிக்கொண்டிருந்த பேட், ஸ்டம்ப், பால் உள்ளிட்டவற்றை அப்படியே போட்டு விட்டு போலீசாரிடம் சிக்காமல் இருக்க தலைதெறிக்க ஓடினார்கள்.
இதையடுத்து, போலீசாரிடம் சிக்கிய சில வாலிபர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
மேலும், ஊரடங்கு விதிமுறைகளை மீறி மைதானத்தில் விளையாடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் வாகனங்களை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.