தோண்ட தோண்ட ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! குகை முழுவதும் குவித்து வைக்கப்பட்டிருந்த எலும்புகள்
சவுதி அரேபியாவில் சுமார் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள எரிமலை குகை முழுவதும் பரவிக்கிடந்த எலும்புகளின் மிகப்பெரிய குவியல் தொகுப்பை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எரிமலை வெடிப்பின் போது வெளியேறிய லாவா குழம்பால் உருவான குகை தான் அது. அந்த குகைக்குள் மனிதர்கள் உட்பட நூறாயிரக்கணக்கான விலங்குகளின் எலும்புகள் குவிந்து கிடந்தன.
இந்த எலும்புகள் சுமார் 7,000 வருடங்களாக வரிக் கழுதை புலிகளால் சேகரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Happy to introduce the Umm Jirsan lava tube, Saudi Arabia, in our new paper just out in AAS.
— Stewie Stewart (@StewieStewart13) July 21, 2021
This 1.5 km long lava tube is chock-a-block with hundreds of thousands of beautifully preserved animal remains. But why? (1/n)https://t.co/BMTYTxR4da pic.twitter.com/ubCTLHVyPX
சவுதி அரேபிய குகையில் பல காலங்களாக சேகரித்து வைக்கப்பட்ட எலும்புகளில் கால்நடைகள், ஒட்டகங்கள், குதிரைகள், கொறித்துண்ணிகள், கேப்ரிட்கள் மற்றும் பல விலங்குகளின் எலும்புகள், அதுமட்டுமல்லாது மனித மண்டை ஓட்டின் எச்சங்களும் அடங்கியுள்ளன.
குகையில் இருந்த 1,917 எலும்புகள் மற்றும் பற்களை மீட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். மேலும் அவற்றில் சில மாதிரிகள் மீது ரேடியோ கார்பன் டேட்டிங் செய்தபோது, அவை சுமார் 439 முதல் 6,839 ஆண்டுகள் பழமையானவை என்பதைக் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
லாவா குகை நீண்ட காலமாக மாமிசம் உண்ணும் விலங்குகளால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
எலும்புகளில் உள்ள வெட்டுக்கள், கீறல்கள் போன்ற அடையாளங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், இந்த எலும்புகள் முதன்மையாக வரிக் கழுதைபுலிகளால் சேகரிக்கப்பட்டவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் இந்த ஹைனாக்களை (கழுதைப்புலிகள்) எலும்புகளின் தீவிர சேகரிப்பாளர்கள் என்று அழைத்தனர்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எலும்பு குவியல்களில் கழுதைப்புலிகளின் எலும்புகளும் அடங்கும். உம்மு ஜிர்சான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்பு குவியல்கள் ஒரு டைம் காப்ஸ்யூலாக செயல்படும் என்றும் இது பண்டைய அரேபியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பற்றி புரிந்துகொள்ள உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிக்கல் எக்காலஜியின் தொல்பொருள் ஆய்வாளர் மேத்யூ ஸ்டீவர்ட் என்பவர் தனது டீவீட்டில் கூறியதாவது, "எலும்பு பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கும் பிராந்தியத்தில், உம்மு ஜிர்சன் போன்ற தளங்கள் ஒரு அற்புதமான புதிய வரலாற்று ஆதாரத்தை எங்களுக்கு வழங்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 20ம் தேதி அன்று தொல்பொருள் மற்றும் மானுடவியல் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் ஆசிரியர்களில் ஸ்டீவர்ட்டும் ஒருவர் ஆவார்.
இந்த ஆய்வு வெறும் ஆரம்பம் தான் என்று ஸ்டீவர்ட் மேலும் கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, உம்மு ஜிர்சான் மற்றும் அதுபோன்ற தளங்கள் இப்பகுதியின் பண்டைய சூழலியல் பற்றிய முக்கிய நுண்ணறிவுகளைக் கொண்டிருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொல்லியல் ஆய்வில் உம்மு ஜிர்சன் பகுதியில் ஹைனாக்களால் சேகரிக்கப்பட்ட எலும்பு குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டது முதல் முறை அல்ல.
இதற்கு முன்னதாக செக் குடியரசில் சர்ப்ஸ்கோ க்ளம் பகுதியில் உள்ள கோமின் குகையில் இதுபோன்ற மற்றொரு எலும்பு சேகரிப்பு குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது 1942 இல் கண்டுபிடிக்கப்பட்டது. பெரிய பாலூட்டிகளின் 3,500 க்கும் மேற்பட்ட எலும்புகள் இந்த குகையில் பாதுகாக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.