பெற்றோருக்கு கொரோனா.... மருந்திற்காக கெஞ்சிய பிரபல நடிகை
கோமாளி பட நடிகையான சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் மிரட்டி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பல மாநிலங்களில் அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் என அனைத்தும் நிரம்பி வழிகிறது. கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இறந்தவர்களை தகனம் செய்யக்கூட தகனமேடை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். பல இடங்களில் ரெம்டெசிவர் மருந்து கிடைக்காமல் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், கோமாளி படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் பெற்றோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனது பெற்றோருக்கு வீட்டிலேயே சிகிச்சையளித்து வருவதாக தெரிவித்துள்ள சம்யுக்தா ஹெக்டே, ரெம்டெசிவர் ஊசி தேவைப்படுவதாக சமூக வலைதளம் மூலம் உதவி கோரியுள்ளார்.
எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டுவிட்டேன் கிடைக்கவில்லை, தயவு செய்து உதவுங்கள் என கேட்டுள்ளார். மேலும் தனது தந்தை மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்ப்பதால் அவரை வீட்டில் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு வீட்டில் 6 குப்பிகள் தேவை என்றும் பதிவிட்டுள்ளார்.