அடிக்கடி பிரியாணி சாப்பிடும் பழக்கம் இருக்கின்றதா? ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்
இன்று பலருக்கும் பிடித்த உணவாக மாறிய பிரியாணியை அடிக்கடி நாம் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது. எந்தவொரு கொண்டாட்டமாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக பிரியாணி முக்கிய உணவாக காணப்படுகின்றது.
தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைதான் முதலில் ஏற்படும். அதற்குப் பிரியாணியும் விதிவிலக்கல்ல.
ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதால் கூடுதலாக சில உடல்நலப் பாதிப்புகளும் உண்டாகும். பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.
வயிற்று எரிச்சல் : வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.
உடல்பருமன் : அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
சர்க்கரை அளவு : நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதய நோய் : பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது. இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
வயிற்றுப் புண் : பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.