கசப்பே இல்லாமல் பாகற்காய் வறுவல் எவ்வாறு செய்வது?
அதிகமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பாகற்காயை அதன் கசப்பு தன்மை தெரியாமல் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கசப்பு சுவையைக் கொண்ட பாகற்காயை குழந்தைகள் பெரும்பாலும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பெரியவர்களும் பாகற்காய் என்றாலே முகம் சுழிக்கவும் செய்கின்றனர்.
ஆனால் பாகற்காய் வயிற்றிலுள்ள குடல் புழுக்களை நீக்குவதற்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகவும் இருக்கின்றது.
இதனை வறுவல் செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு
பாவக்காய் - 300 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை
பாகற்காயினை விதைகளை நீக்கிவிட்டு, மெல்லிய நீள துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதனை உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்த பின்பு பாகற்காயினை பிழிந்து அதில் உள்ள நீரை வெளியேற்றினால், கசப்பு தன்மை சற்று குறையும்.
பின்பு வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து, பின்பு கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன் பாகற்காய் சேர்த்து கிளறிவிட்டு ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும்.
பாகற்காய் நன்கு வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, 15 நிமிடம் நன்கு மொறுமொறுவென்று வரும் வரை ப்ரை செய்து இறக்கினால் சுவையான பாவக்காய் வறுவல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |