உடல் எடையை உடனே குறைக்க இந்த ஒரு சூப்பை குடிச்சி பாருங்க!
உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது.
பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.
இந்த பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது.

எனவே தினந்தோறும் பார்லி கஞ்சியை அருந்துபவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- கம்பு - 1 கப்
- பார்லி - 2 கப்
- வெங்காயம் - 1
- செலரிக் கீரை - 1
- தக்காளி - 1
- முட்டைக் கோஸ் - சிறிதளவு
- உருளை - 1
- கேரட் - 1
- ஓமம் - 1 சிட்டிகை
- துளசி - 1 சிட்டிகை
- உப்பு - தே. அளவு
- மிளகுத் தூள் - தே. அளவு
செய்முறை
வெங்காயத்தை சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். செலரிக் கீரையை ஆய்ந்து மண் நீக்கி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அத்துடன் கேரட், உருளை, கோஸ் ஆகியவற்றையும் நன்கு கழுவி சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் தக்காளியை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

முதலில் கம்பையும், பார்லியையும் ஊறவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெங்காயம், செலரி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் மூன்று பங்குத் தண்ணீர் சேர்த்து கம்பையும், பார்லியையும் நன்கு களைந்து அடுப்பை சிம்மில் வைத்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
ஓரளவு வெந்தவுடன் உப்பு, மிளகுத் தூள், ஓமம், துளசி ஆகியவற்றை எல்லாம் சேர்த்துக் கிண்டி பாத்திரத்தை மூடி வைக்கவும். அவ்வப்போது மூடியை திறந்து நன்கு கிண்டி விட்டுக் கொள்ளவும். தண்ணீர் வற்றக் கூடாது.
இந்நிலையில் சில நிமிடங்களில் பார்லி நன்றாக வெந்துவிடும்.
பார்லி வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது சுவையான பார்லி சூப் தயார். உடனே சூடாக அனைவருக்கும் பரிமாறலாம்.