ஒரே நாளில் உலகப்புகழ்பெற்ற தாத்தா! தற்கொலை முயற்சி? மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பிரபலமடைந்த பாபா கா தாபா உரிமையாளர் காந்தா பிரசாத் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மால்வியா நகரில் பாபா கா தாபா என்ற பெயரில் காந்தா பிரசாத் (80) என்ற முதியவர் சிறு உணவகம் நடத்தி வந்தார்.
கொரோனா ஊரடங்கால் வியாபாரம் நடைபெற வில்லை என முதியவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ கடந்த ஆண்டு வைரலானது.
அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கோனோர் அவருக்கு நிதியுதவியும் வழங்கினர். பலரும் பாபா கா தாபா கடைக்கு சென்று உணவருந்தி கடை வியாபாரத்தை அதிகரிக்கச்செய்தனர்.
இதனை தொடர்ந்து , காந்தா பிரசாத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதிய உயர்தர உணவகம் ஒன்றை திறந்தார் . புதிய கடையை திறந்ததால் அவர் தனது பழைய உணவகத்தை மூடினார் .
ஆனால் , எதிர்பார்த்த அளவு வருமானம் இல்லாமல் காந்தா பிரசாத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது . இதனால் கடந்த வாரம் தனது பழைய கடைக்கே மீண்டும் திரும்பினார் .
மால்வியா நகரில் பாபா கா தாபா என்ற அதேபெயரில் தனது பழைய கடையை மீண்டும் திறந்து வியாபாரம் நடத்தி வந்தார் . இந்நிலையில் , பாபா கா தாபா உரிமையாளர் காந்தா பிரசாத் நேற்று இரவு திடீரென மயங்கி விழுந்தார் .
இதையடுத்து , அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
மதுபானத்துடன் தூக்கமாத்திரையை கலந்து குடித்ததால் காந்தா பிரசாத் சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார் . இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.