ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கீங்களா? இந்த விரத முறைகளை கண்டிப்பாக கடைபிடிங்க
கார்த்திகை 1ஆம் தேதி ஆரம்பித்து தை மாதம் 1ஆம் தேதியன்று மகர ஜோதி தரிசனத்தை காணும் வரையிலும் கடுமையான விரதத்தை கடைபிடித்து ஐயப்பனுக்கு விரதம் இருப்பதே மிகச் சிறந்த விரதமாகும்.
மாலை அணியும் போது
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடிவெடுத்துவிட்டால், மாலையணிந்து விரதம் இருப்பதற்கு முன்பாக முதலில் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தன்னுடைய குருசாமியிடம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தகவல் தெரிவித்து அனுமதி வாங்கிவிட வேண்டியது அவசியமாகும்.
மாலையை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும். மாலை துளசி மாலையையும், ருத்ராட்சி மாலையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாலைகளில் கண்டிப்பாக 108 மணிகள் இருக்கவேண்டியது கட்டாயத்மாகும்.
ஐயப்பன் ஹரிஹர புத்திரன் என்பதால், துளசி மற்றும் ருத்ராட்சம் என இரண்டு மாலையையும் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
மாலை செம்பு, வெள்ளியால் ஆனதென்றால், பல ஆண்டுகளுக்கு அணிந்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மாலையை அணிவதற்கு முன்பாக பூஜையறையில், சுத்தமான பசும்பாலில் ஊறவைக்க வேண்டும். மாலை அணியும்போது ஐயப்பனின் மூல மந்திரத்தை மனதார சொல்ல வேண்டும்.
அதே போல், மாலையை கோவிலிலோ அல்லது தன்னுடைய தாயாரின் முன்னிலையிலோ மாலையணிந்து அவரின் ஆசியை வாங்க வேண்டும்.
தினமும் கடைபிடிக்க வேண்டியவை
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும்.
விரதம் இருக்கும்போது மது, சிகரெட், போன்ற போதை வஸ்துகளைப் பயன்படுத்தக்கூடாது.
விரதம் மேற்கொள்ளுபவர்கள் விரதகாலத்தில் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்து நீரில் குளிக்க வேண்டும்.
இதனால் உடலும் மனமும் மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். விபூதி, சந்தனம் குங்குமம் போன்றவை தரித்து பூஜைகள் செய்து அவரவர் வசதிக்கு ஏற்ப 108 அல்லது 1008 சரணகோஷங்கள் முழங்க வேண்டும்.
விரதகாலம் முழுமையும் ஒருவேளை அளவோடு சைவ உணவருந்தி இரவில் பழம், பால் போன்ற இலகு ஆகாரங்கள் உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும்.
மாலை போட்டிருக்கும்போது பகல் நேரத்தில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை, மெத்தை போன்றவற்றைத் தவிர்த்து தரையில் வெறும் துண்டு அல்லது எதுவும் விரிக்காமல் படுத்து உறங்க வேண்டும் என்பது ஐதீகம்.
தொழிற்சாலையில் வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும்பொருட்டு ஷு அணியலாம். இதில் குற்றம் ஏதும் இல்லை.
விரத காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம். மற்றபடி சாதாரணமாக சிகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.
மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில், வீட்டிலுள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால் அதே வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழட்டுவது உத்தமம்! ஆனால், தாங்கள் வெளியே எங்கும் தங்கியிருந்தால் மாலையைக் கழட்டவேண்டிய அவசியமில்லை.
கன்னி பூஜை அவசியம்
முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள், கன்னிபூஜையை அவசியம் செய்யவேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் கடன் வாங்கியாவது கன்னிபூஜையை செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை.
ஐயப்பன் அத்தகைய ஆடம்பரத்தை விரும்புவதும் இல்லை. தங்களால் எப்போது எவ்வளவு முடியுமோ, எப்போது இயலுமோ, வீட்டிலேயே உணவைப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு, சாலையோரத்தில் உள்ள மிகவும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றவரை அளிக்கலாம்.
குறிப்பு: ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.