பிரபல உதவி இயக்குனர் திடீர் மரணம்.. இரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்
தத்ரூபமாக ஓவியம் வரையும் ஓவிய கலைஞராகவும், உதவி இயக்குனராகவும் இருந்த இளையராஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த செம்பியவரம்பு என்ற கிராமத்தில் பிறந்த இளையராஜா சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் வல்லவராக இருந்தார்.
இவரது ஓவியங்கள் அச்சுஅசலாக உயிர் உள்ளது போன்று இருக்கும் என்பதால் பலர் அவரது ஓவியங்களைப் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இளையராஜாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று பாதித்த நிலையில் எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது நுரையீரலில் நோய் பரவியதால் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஓவியர் இளையராஜா உயிரிழந்தார்.
இவர் படிப்பு முடித்து சென்னை வந்த போது ஒரு நிகழ்வில் ஓவியர் இளையராஜா நடிகர் பார்த்திபனை சந்திக்க நேர்ந்தது. அப்போது பத்து நிமிடங்களில் பார்த்திபனை 'போர்ட்ரைட்' வரைந்து கொடுத்தார்.
அதற்கு பாராட்டிய பார்த்திபன் சில நாட்கள் கழித்து அவரை அழைத்து 'இவன்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார். 'எதிர்கால இயக்குநர்கள்' என்று டைட்டிலில் என் பெயர் போட்டு ஓவியர் இளையராஜாவை உற்சாகப்படுத்தினார்.
அவரது மறைவிற்கு ஓவிய கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



