உண்டியலில் பணத்தை திருடிய திருடனின் நெகிழ்ச்சி கடிதம் - ஆடிப்போன நிர்வாகத்தினர்கள்
கோயில் உண்டியலில் பணத்தை திருடி மீண்டும் உண்டியலில் கடிதத்துடன் போட்ட மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அருகே காஞ்சனகிரி மலைக்கோவிலில் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைப்பெறுவது உண்டு.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கோயில் வளாகத்தில் 1,008 சுயம்பு லிங்கங்களுடன் கூடிய விநாயகர் சன்னதியில் கோயில் நிர்வாகம் சார்பில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் கடந்த 17-ம் தேதி உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச்சென்றதாக கோயில் நிர்வாகத்தினர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்கள் விசாரணையை தொடர்ந்தனர். இந்நிலையில், கோயில் உண்டியல் பணத்தை எண்ண முடிவு செய்து, திறந்து காணிக்கை பணத்தை எண்ணும் போது ஒரு கவரில் கடிதம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் (500 ரூபாய் நோட்டுகள்) இருந்தது.
அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள். நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிவிட்டேன்.
அதன்பின் எனக்கு மனசு சரியில்லை. நிம்மதியும் இல்லை. வீட்டில் நிறைய பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது.
எனவே, நான் மனம் திருந்தி உண்டியலில் இருந்து எடுத்த பணம் ரூ.10 ஆயிரத்தை போட்டு விட்டேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்.
கடவுள் என்னை மன்னிப்பாரா என தெரியாது. வணக்கம்” என அதில் மர்ம நபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலானது சமூக வலைத்தளத்தில், வைரலாக கோயில் உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர் மீண்டும் பணத்தை கோயில் உண்டியலில் செலுத்தி மன்னிப்பு கேட்ட இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.