ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க தாமதமானதால் ஆத்திரம்: பின்பு நடந்த ஆத்திரம்
பணம் எடுப்பதற்கு தாமதமானதால் 5 பேர் ஒன்று சேர்ந்து மலைவாழ் இளைஞரை தாக்கி பணம் பறித்துள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ்(30). இவர் ஏலகிரி மலை புங்கனூர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க நேற்று இரவு 7 மணிக்கு சென்றுள்ளார்.
தன்னிடம் இருந்த 4 கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.46 ஆயிரம் எடுத்த போது, வெளியே பணம் எடுப்பதற்கு 5 பேர் காத்துள்ளனர்.
கணேஷ் பணம் எடுக்க காலதாமதமானதால் வெளியே காத்திருந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் சண்டையிட்டுள்ளனர்.
அப்போது, கணேஷூக்கும், அவர்களுக்கும் இடையே வாய் தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த 5 பேர் ஒன்று சேர்ந்து கணேஷை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 1 செல்போன், ரூ.46 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
இதைதொடர்ந்து, அங்கு வந்த மலைவாழ் மக்கள் காயமடைந்த கணேஷை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்பு பொலிசார் மலைவாழ் இளைஞரை தாக்கி பணத்தினை பறித்துச்சென்ற 5 பேரைக் கைது செய்துள்ளனர்.
இதில், ஆர்.பிரசாந்த் (28) என்பவர் கிருஷ்ணகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.