ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
பொதுவாகவே தென்னிந்திய உணவுகள் உலகப்புகழ் பெற்றவை. குறிப்பாக இந்திய உணவுகளில் சட்னி வகைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
இட்லி, தோசைக்கு சட்னி சாப்பிடுபவர்களை விடவும் சட்னியின் சுவைக்காகவே இட்லி, தோசை சாப்பிடுபவர்கள் தான் அதிகம்.

அப்படி சட்னி பிரியர்களை குஷியாக்கும் வகையில், ஆந்திரா பாணியில் அனைவரும் மிச்சம் இன்றி சாப்பிடும் வகையில் காரசாரமான வெங்காய சட்னியை அசத்தல் சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சட்னி இட்லி, சோசை, பூரி மற்றும் சாதத்துக்கு கூட சூப்பராக பெருந்தும்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 1 1/2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 12
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
தக்காளி - 1 (நறுக்கியது)
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
பூண்டு - 4 பல்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதனையடுத்து அதில், வரமிளகாயை சேர்த்து வறுத்து, அவற்றை ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் தக்காளியையும் சேர்த்து, அத்துடன் புளியையும் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.

அவை ஆறியதும், ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த மிளகாயை சேர்த்து, அத்துடன் வதக்கிய வெங்காயம், தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் அரைத்த சட்னியையும் சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேகவிட்டு இறக்கினால், அருமையான சுவையில், ஆந்திரா வெங்காய கார சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |