அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கும் கருணை கிழங்கு குழம்பு! இப்படி செய்து பாருங்க
ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. கருணைக் கிழங்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
மேலும் அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கொடுப்பதிலும் ஆற்றல் காட்டுவதுடன் ஜீரண மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதில் பெரிதும் துணைப்புரியும்.

இதில் செரிந்து காணப்படும் நார்ச்சத்து காரணமான மூலநோயை குணப்படுத்துவதுன், மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும்.
பெருங்குடல் மற்றும் உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக இருக்கும் ஆற்றல் கொண்ட கருணைக்கிழங்கை கொண்டு நாவூரும் சுவையில் எப்படி குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கருணைக் கிழங்கு - 300 கிராம்
நல்லெண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 7 பல்
சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
சாம்பார் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை
முதலில் கருணைக்கிழங்கை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவி குக்கரில் போட்டு 2 விசில் வரும் வரையில் வேகவிட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆறியதும் தோல் நீக்கி அதை துண்டுகளாக்கி அதை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனையடுத்து பெரிய நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் வடிக்கட்டி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து சாம்பார் தூள், மல்லித் தூள் மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பில் எண்ணெய் பிரியும் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
கடைசியாக வேக வைத்து துண்டாக்கிய கருணைக்கிழங்கை அதில் சேர்த்து மூடி போட்டுமிதமான தீயில் வைத்து, 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கருணைக் கிழங்கு குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |