உடலை குளிர்ச்சியாக்கும் அகத்திக்கீரை தேங்காய்பால் - செய்வது எப்படி?
அகத்திக் கீரையை அன்றாடம் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கிறது.
பித்தம் சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக் கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
தேவையான பொருட்கள்
அகத்திக்கீரை - அரை கட்டு,
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 10,
சீரகம் - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய்ப்பால் - 200 கிராம்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
அரிசி கழுவின நீர் - 200 மில்லி,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை விளக்கம்
முதலில் அகத்திக்கீரையை நன்றாகச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து வெங்காயம், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் அகத்திக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். கீரை வெந்தபின் அரிசி கழுவின நீர்விட்டு ஒரு கொதிவந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
சூப்பரான சத்தான அகத்திக் கீரை தேங்காய் பால் சூப் ரெடி.
