உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் சென்றால்? இந்த கேள்விக்கு மறைந்த நடிகர் நாகேஷ் அளித்த பதில் இதோ
தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முயாத நினைவுகளை ரசிகர்கள் மனதில் பதிந்து சென்ற நடிகர்களில் நாகேஷும் ஒருவர். கதாநாயகன், நகைச்சுவை நடிகர், வில்லின், குணச்சித்திர வேடம், நடனம் என்று அனைத்திலும் தனது திறமையினை வெளிக்காட்டி பிரபலமானவர்.
இவரிடம் வானொலி பேட்டி ஒன்றின் போது கேட்கப்படட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் தற்போது இருக்கும் அனைத்து வயதினருக்கு தன்னம்பிக்கை வளர்ப்பதாக இருக்கின்றது.
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
இந்த கேள்விக்கு நடிகர் நாகேஷ் கூறிய பதில், நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமாக வைத்து சாரம் கட்டி, குறக்குப் பலகைகள் போட்டு, அதன் மீது கட்டிட தொழிலாளர்கள் நின்று வேலை செய்து, கட்டிடம் உயர்ந்து கொண்டே போய்விடும்.
பின்பு வேலை அனைத்தும் முடிந்து அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டிடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்து விடுவார்கள்.
பின்பு வேறெங்கோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?
அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டிடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்... ஆதலால் நான் வாழை அல்ல... சவுக்கு மரம் என்று பதில் கூறியுள்ளார்.