ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தெரியாது? பிரபல நடிகரின் பேச்சால் குவியும் கண்டனம்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தனக்குத் தெரியாது என்றும், அவர் ஆஸ்கர் வாங்கியதெல்லாம் முக்கியமில்லை என்கிற ரீதியில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பேசியது சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் ஒரு பேட்டியில், "ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு பாணி உள்ளது. பலர் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. நான் கவனித்ததில்லை.
வருடத்துக்கு ஒரு ஹிட் பாடல் கொடுப்பார். ஆஸ்கர் வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் எனக்கு முக்கியமல்ல. மேலும், அதனால் தான் பாரத ரத்னா விருதெல்லாம் என்.டி.ஆரின் செருப்புக்குச் சமம், கால் விரல் நகத்துக்குச் சமன் என்று நான் சொன்னேன்.
அந்த விருதைக் கொடுத்தால் அது அவர்களுக்குப் பெருமை. விருதுக்குப் பெருமை. அவருக்கு என்ன பெருமை. என்.டி.ஆர் அதையெல்லாம் தாண்டி உயர்ந்தவர்" என்று முற்றிலும் தொடர்பே இல்லாமல் எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்றார்.
இதன் பின் தொடர்ந்து பேசியிருக்கும் பாலகிருஷ்ணா இளையராஜாவைப் புகழ்வதைப் போல புகழ்ந்து, அவர் பாடலுக்கு நான் திறமையாக வாயசைத்திருக்கிறேன் என்கிற ரீதியில் தனது பதிலைத் தொடர்ந்துள்ளார்.

மேலும், ஜேம்ஸ் கேமரூன் போல தான் நீண்ட நாட்கள் தேவையில்லாமல் படப்பிடிப்பு நடத்துவதில்லை என்று ஹாலிவுட் இயக்குநரோடும் தன்னை ஒப்பிட்டுப் பேசியுள்ளார். சர்ச்சைப் பேச்சுக்களும், தற்பெருமைப் பேசுவது பாலகிருஷ்ணாவுக்குப் புதிதல்ல.
இம்முறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தேவையில்லாமல் பேசி தற்போது இணையத்தில் பலரது விமர்சனத்து ஆளாகியுள்ளார்.
மேலும், பாலகிருஷ்ணா தன் படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை அணுகியதாகவும் அவர் மறுத்ததால் எழுந்த காழ்ப்புணர்ச்சியில் இப்படி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.