9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பேர்: பெற்றோர் கண்முன்னே எரித்து கொன்ற கொரூரம்
டெல்லியில் 9 வயது சிறுமி 4 நபர்களால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தென்மேற்கு பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது தலித் சிறுமியை மதகுருவும் இடுகாட்டில் பணிபுரியும் 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பெற்றோரின் கண்முன்னே எரித்து கொன்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கொலைசெய்யப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் டெல்லி பொலிசார் அந்த 4 பேரின் மீதும் ஐபிசி 302, 376, 506, போக்ஸோ சட்டம், எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் குடும்பம் இடுகாட்டில் அருகே வசித்து வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் இடுகாட்டில் உள்ள கூலரில் தண்ணீர் கொண்டு வர சிறுமி சென்றுள்ளார்.
6 மணிக்கு மேல், இடுகாட்டில் உள்ள 3 பேரும், மதகுருவும் சிறுமியின் தாயை அழைத்து சிறுமியின் உடலை காண்பித்ததோடு, தண்ணீர் எடுக்கும் போது இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
மேலும், அந்த 4 பேரும் அச்சிறுமியின் தாயிடம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தால் உடற்கூறு ஆய்வின் போது சிறுமியின் உடல் உறுப்புகளை திருடிவிடுவார்கள் என்று கூறி சிறுமியை அங்கேயே எரித்துள்ளனர்.
பின்பு பெற்றோருக்கு பணம் கொடுக்கிறோம்.. யாரிடமும் கூற வேண்டாம் என்று கூறியதால் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்படவே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மேலும், அப்பெண்ணை எரிக்கும் சமயத்தில் அச்சிறுமியின் பெற்றோரை இடுகாட்டில் இருக்கும் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாக சிறுமியின் தாயார் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து பொலிஸ் விசாரணையில் அந்த 4 பேரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல அரசியல் பிரமுகர்கள் 4 பேரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி.