இந்தியாவில் 2வது அலை போய் கொரோனா 3 ஆவது அலை வந்துடும்.. நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்!
மே 1 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு தொடங்காவிட்டால் மாநிலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை வீச வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் தயாரான இரு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வரும் 1ஆம் தேதி முதல் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு அதை தயாரித்த நிறுவனங்கள் விலை நிர்ணயித்துள்ளன.
இதை பொதுமக்களால் கொடுக்க இயலாது என்பதால் பல மாநிலங்கள் தங்கள் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளன.
அந்த வகையில் மகாராஷ்டிரா அரசும் 18 வயது முதல் 44 வயது வரை இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது.
அதே வேளையில் மத்திய அரசு அறிவித்தது போல் இந்த தடுப்பூசி போடும் திட்டம் வரும் மே 1 ஆம் தேதி தொடங்க இயலாது.
ஏனெனில் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போட மருந்துகள் போதுமானதாக இல்லை என அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் தடுப்பூசி போட 9 கோடி பேர் தகுதியானவர்கள் இருக்கும் நிலையில் இதுவரை 1.50 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில் தடுப்பூசி போடும் திட்டத்தை வேகமாக தொடங்காவிட்டால் கொரோனாவின் 3ஆவது அலையை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதற்கு சமம்.
தடுப்பூசி போடும் திட்டத்தை ஒத்தி வைத்தால் அடுத்த சில மாதங்களில் மாநிலத்தில் கனமழை, நிலச்சரிவு ஆகிய இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது தடுப்பூசி திட்டத்திற்கு இன்னல் ஏற்படும்.
அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் அதிக நேரம் எடுத்துகொண்டால் கொரோனா வைரஸ் புதிய அவதாரம் எடுக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளார்.