சனிக்கிழமை பிறக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 2022ம் ஆண்டு பலன்கள்
இந்த ஆங்கிலப் புத்தாண்டு (01.01. 2022) பிலவ வருடம், தட்சிணாயனம், ஹேமந்த ருது, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை), திரயோதசி திதி, கேட்டை நட்சத்திரம் 1}ஆம் பாதம், கண்ட நாம யோகம், கரஜை கரணம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை அளவில், வெள்ளிக்கிழமை இரவு சனிக்கிழமை விடியற்காலை அதாவது 31.12.2021 முடிந்து 01.01.2022 சனி பகவானின் ஹோரையில் புத்தாண்டு பிறக்கிறது.
உதயத்தின் சிகரம்: லக்னாதிபதி, தொழில் ஸ்தானமான பத்தாமதிபதியான புத பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
மஹாவிஷ்ணு என்கிற கேந்திர ஸ்தானத்திலும், மஹாலட்சுமி என்கிற திரிகோண ஸ்தானத்திலும் முதலிடம் வகிப்பது லக்னமாகும்.
இந்த ஸ்தானம் ஆத்ம உயிர் ஸ்தானமாகும். எல்லா லக்னத்திற்கும் லக்னாதிபதி வலுத்திருப்பது நல்லதாகும். அதிலும் மிக முக்கியமாக 6, 8, 12}ஆம் அதிபதிகளைவிட லக்னாதிபதி வலுப்பது சிறப்பாகும். இதை வைத்துத்தான் லக்னாதிபதி வலுத்தார் என்பதை நிச்சயிக்க முடியும்.
லக்னம், லக்னாதிபதி பலம் பெற்றால் உடல் பலம், மன வளம், ஆத்ம பலம் போன்றவை ஏற்படும். திரிகோண ஸ்தானத்தில் முதலிடமாக இருப்பதால் முந்தைய ஜென்மங்களில் செய்த புண்ணியத்தையும், முதலிடம் கேந்திரமாக இருப்பதால் புதுக் கர்மாவை செய்யத் தூண்டி வெற்றி பெறுவதையும் குறிக்கும்.
இது எந்த பாவத்துக்கும் இல்லாத சிறப்பாகும். அதோடு, ஊடு மகா தசையை மீறி பலன் தருவது ஒன்று மற்றும் ஐந்தாமதிபதிகளாவார்கள். அதாவது லக்னாதிபதி எல்லா கிரகங்களையும் விட வலுத்தால், எந்த மோசமான தசை நடந்தாலும் லக்னாதிபதி சுப பலத்தைத் தருவார்.
புகழ், கீர்த்தி, செல்வாக்கு, கௌரவம் குறையாமல் நடப்பதற்குத் துணைபுரிவார். மேலும் அடிப்படை வசதி குறையாமல் இருப்பதற்கு சுப பலனைத் தருவார். லக்னம், லக்னாதிபதி சுப பலம் பெறுவது சிறந்தது என்றால் மிகையாகாது. லக்னாதிபதி தன்னுடைய இயற்கை பகை கிரகத்துடன் மற்றும் மறைவு ஸ்தான ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களுடன் சேராமல் இருப்பது சிறப்பு. மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும் திரிகோணாதிபதியின் பார்வை பெறுவது சிறப்பாகும்.
பொதுவாக, ஆறாம் வீட்டு அதிபதியின் சேர்க்கை இல்லாமலிருப்பது மேன்மை. லக்னாதிபதி எங்கிருந்தாலும் ஐந்து மற்றும் ஒன்பது ஆகிய திரிகோணாதிபதிகளின் பார்வையை பெற்றிருப்பது சிறப்பு.
சுபாவ சுப கிரகங்கள் திரிகோண ஸ்தானங்களில் பலம் பெறுவதால் அந்த இடங்களில் லக்னாதிபதி இருப்பதும் சிறப்பு. லக்ன, அசுப கிரகங்கள் உபஜெய (வெற்றிக்கு உதவும் ராசிகள்) ஸ்தானங்களில் இருந்தால், ஸ்தான பலம் கிடைத்திருப்பதாலும், ஆறாம் வீட்டைத் தவிர்த்து, மற்ற மூன்று, பத்து, பதினொன்றாம் வீடுகளில் இருப்பதும் சிறப்பு. லக்னாதிபதி, ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோண ராசிகளில் இருந்தாலும், லக்னாதிபதி இருந்த வீட்டிற்கதிபதி ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெறுவது யோக அமைப்பாகும். இதேபோல் லக்னாதிபதி நின்ற நட்சத்திர சார அதிபதி இருப்பதும் சிறப்பாகும்.
6, 8, 12-ஆம் வீடுகளில் ராகு / கேது பகவான்கள் இருந்து அவர்களின் நட்சத்திர சாரத்தில் லக்னாதிபதி இல்லாமலிருப்பது அவர் பலத்தைக் கூட்டிக் கொடுக்கும் அம்சமாகும்.
மிதுன, கன்னி, தனுசு, மீன லக்னங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் பெறுவதாலும், குரு பகவானுக்கு மட்டும் சற்று கூடுதல் கேந்திராதிபத்திய தோஷம் அனுபவத்தில் ஒத்து வருவதாலும், புத பகவானுக்கு குறைவாக இருப்பதாலும், லக்னத்தில் திக்பலம் பெற்று கேந்திரத்தில் குரு பகவான் மட்டும் இருந்தால் நல்லதாகும். ஆதலால் 12 ராசிகளுக்கும் குரு லக்ன கேந்திரத்தில் இருப்பது சிறப்பு. மற்ற 4, 7, 10}இல் கேந்திர நிலை இந்த லக்னங்களுக்கு பெறாமல் இருப்பது சிறப்பு.
"மாயோனாகிய திருமாலின் முழுமையான சாயை எனத் திகழும் புத பகவானின் மாண்பை மூவராலும், தேவராலும், யாவராலும் பகர ஒண்ணாதது!' என்கிறது சப்தரிஷி சம்மேளனம்.
கோள்களில் மிகச் சிறியதும் புதனே; கீர்த்தியில் பெரியதும் புதனே!
சூரிய சங்கமத்தால் சிறிதும் சேதமடையாத கிரகம் புதன் ஒருவர்தான் என்பது மட்டுமல்ல; "மறைந்த புதன் நிறைந்த மதி!' என ஜெய்மினி சூத்திரம் பகர்வதுபோல், கூடுதல் யோக வலுவையும் அவர் பெறுவதால்தான் புகழ்மிக்க ஜோதிட மாமேதைகள், கோடீஸ்வரர்கள், லட்சாதிபதிகள், நிலச்சுவான்தார்கள் எனப் பெரும் செல்வந்தர்களின் பட்டியலுக்கான காரணம் ஜாதகத்தில் மேற்படி சங்கம விசேஷத்துவமே என்று மகரிஷி பராசரர் கூறுகிறார்.
மேலும் "மால்' என்று சொல்லக்கூடிய புத பகவான் லக்னத்தில் திக் பலம் பெற்றால் அந்த ஜாதகத்தில் உள்ள ஒருசில குற்றம் போய்விடும் என்றும், அதைவிட சுக்கிர பகவான் லக்னத்தில் இருந்தால் பல குற்றங்கள் மாய்ந்து விடும் என்றும், அதையும் விட குரு பகவான் லக்னத்தில் திக்பலம் பெற்றாரானால் பலவிதமான குற்றங்களையும் நீக்கி விடும் என்றும் சொல்லப்படுகிறது.
ஒருவருடைய ஜாதகத்தில் தாயை சந்திர பகவானைக் கொண்டும், தந்தையை சூரிய பகவானைக் கொண்டும் பலன் கூறுகிறோம். உண்மையிலேயே லக்னம் அல்லது லக்னாதிபதி வலுப்பெற்றாலேயே அவருடைய தகப்பனார் மிகச் சிறப்பாக இருப்பார். அப்படி லக்னாதிபதி வலுக்கப்பெற்ற ஜாதகர், தன் தந்தையைக் காட்டிலும் மிகச் சிறப்பான வாழ்க்கையை உடையவராக இருப்பார்.
ஏனென்றால் ஒரு மனிதனுக்கு உயிர் தந்தையிடமிருந்துதான் செல்கிறது. அந்த உயிர்தான் லக்ன பாவம். தாய் என்பது அந்த உயிரை உலகுக்கு அடையாளம் காட்டக்கூடிய, உருவத்தை உருவாக்குபவராக இருக்கிறார். இதனால் சந்திர பகவானை தனு (உடல்) காரகர் என்றழைக்கிறோம்!
லக்னம், ஜாதகருடைய உருவ அமைப்பு, குணாதிசயங்கள், அவருடைய கீர்த்தி, பிரதாபங்கள் போன்ற பலன்களைக் குறிக்கும். லக்னாதிபதியின் தன்மை, லக்னாதிபதியுடன் சேர்க்கைப் பெற்ற கிரகத்தின் தன்மை, லக்னத்தில் நின்ற கிரகத்தின் தன்மை இவற்றால் ஒரு ஜாதகருடைய குணங்கள் மாறுபடலாம்.
சுப கிரகங்கள் லக்னத்தைப் பார்த்தாலும் அல்லது சுப கிரகங்கள் லக்னத்தில் இருந்தாலும் பலன்கள் மாறுபடும். "எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்' என்பார்கள். அதேபோல் லக்னம் என்பது சிரசு! லக்னத்தில் அசுப கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் தலையில் அடிபடுவதைப் பார்க்கிறோம்.
புத்தாண்டு ஜாதகத்தில் புத பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான இரண்டாம் திரிகோண வீட்டில், இரண்டாம் திரிகோணாதிபதியான ஆட்சிபெற்று, சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து, நவாம்சத்தில் மிதுன ராசியை அடைந்திருக்கும் சனி பகவானுடன் இணைந்திருக்கிறார்.
இதை "மந்திர சித்தி பெறும் வீடு' என்றும் கூறுவார்கள். மாமன் வர்க்கத்தையும் குறிக்குமிடம். திடீரென்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள், பட்டம், பதவி, கெளரவம், புகழ் போன்ற நற்பலன்களைக் குறிக்கின்றது.
பூர்வ புண்ணிய, பாவ புண்ணியங்களை அறிய உதவும் வீடுமாகும். இந்த வீட்டிற்கு அதிபதியாக சுபாவ சுப கிரகமோ, அசுப கிரகமோ யாராக இருந்தாலும் சுபராகவே கருதப்படுகிறார். இரண்டு திரிகோணாதிபதிகள், ஒரு கேந்திராதிபதி, ஒரு திரிகோணாதிபதி ஆகியோரின் இணைவு நல்ல இடத்தில் ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது!
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்குமதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்), வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
நாடகம், நாட்டியம், சினிமா போன்ற பல்வேறு கலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள சுக்கிர பகவானை "கலைத்துறைக்கதிபதி' என்றும், பொன்னும் பொருளும் போகமும் போன்ற குபேர சம்பத்தை அளிக்கும் வல்லமை பெற்றிருப்பதால் "கனகமீவோன்' என்ற பெயரையும், "வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தன்' என்ற சிறப்புப் பெயரோடு, மழையை நினைத்த மாத்திரத்தில் பெய்ய வைக்கும் "மழைக்கோள்' என்றும் போற்றிப் புகழப்படுகிறார்.
ஒன்பதாமிடம் என்பது தந்தை, குரு, தெய்வம், சமூகத்தில் கௌரவம், புகழ், பாக்கியங்கள் சேருதல், அடிப்படை வசதிகள், ஆடம்பர வாழ்க்கை, மண், மனை, சொத்து சுகங்கள் சேருதல், வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் திடீர் முன்னேற்றங்கள், எதிர்பாராதவை கிடைத்தல் போன்ற நற்பலன்களைக் குறிக்கிறது!
