நடிகை சாந்தினி அளித்த புகார்: அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை
நடிகை சாந்தினி அளித்த மோசடி புகாரின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் கோரிய முன்ஜாமின் வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மணிகண்டன் தலைமறைவாக உள்ளார்.
நாடோடிகள் படத்தில் நடித்த சாந்தினி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார்.
தனக்கு மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நடிகை சாந்தினி கூறியிருந்தார்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தேடப்பட்டு வந்த நிலையில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் தலைமறைவாகி இருக்கும் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.