குறைந்த கருவுறுதல் விகிதம்: 669 IVF மையங்களுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழ்நாடு!
Tamil Nadu tops IVF clinics list nationwide : இந்தியாவில் செயற்கைக் கருத்தரிப்பு எனப்படும் IVF சிகிச்சை மையங்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
பின்னணி காரணம் என்ன?
செயற்கைக் கருத்தரிப்பு மற்றும் வாடகைத் தாய் வழிமுறைப் பதிவேட்டின் தரவுகளின்படி, 2026 ஜனவரி நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 2,650 பதிவு செய்யப்பட்ட IVF கிளினிக்குகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 669 IVF மையங்கள் உள்ளன.

குஜராத் 361 மையங்களுடன் இரண்டாவது இடத்திலும், தெலங்கானா 276, கர்நாடகா 216, ஆந்திரப் பிரதேசம் 203 மையங்களுடன் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. தமிழ்நாட்டில் கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்திருப்பது IVF மையங்களின் அதிகரிப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
பெண்கள் உயர்கல்வி கற்பதும் வேலைவாய்ப்பில் அதிகளவில் ஈடுபடுவதும் திருமணம் மற்றும் மகப்பேற்றைத் தள்ளிப்போடுவதற்கு காரணமாகிறது. இதனால் வயது அதிகரிக்கும்போது ஏற்படும் கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு IVF உள்ளிட்ட நவீன சிகிச்சைகளை நாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தமிழ்நாட்டின் மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பு காரணமாக பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். அதிகரித்துள்ள மருத்துவ விழிப்புணர்வும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதேவேளை, தமிழ்நாட்டில் மருத்துவத் துறை அதிகளவில் வணிகமயமாகியிருப்பதும் IVF மையங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு குறைந்த கருவுறுதல் விகிதம், திருமணம் மற்றும் மகப்பேறு தாமதம், மருத்துவ விழிப்புணர்வு, மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருத்துவத் துறையின் வணிகமயமாக்கல் ஆகியவையே தமிழ்நாட்டில் IVF மையங்கள் அதிகரித்திருப்பதற்கான முக்கிய காரணிகளாக அறியப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |