7300 கோடி ரூபாய் இந்தியாவிற்கு நன்கொடை அளித்த பிரபல நிறுவனர்- குவியும் பாராட்டு மழை!
கொரோனாவின் இரண்டாவது அலையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
அந்த வகையில், அரசியல் பிரபலங்கள், மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள், நடிகர்கள் என பலதுறையை சார்ந்தவர்கள் உதவி செய்ய..., கூகுள் நிறுவனம் ரூ.135 கோடியும், டுவிட்டர் ரூ.110 கோடியும் அறிவித்தன.
மேலும், இது போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசிகளுக்கு நன்கொடை வழங்கி வருகின்றன.
இப்படி ஒரு நிலையில் தான், எதிரியம் கிரிப்டோகரன்சி இணை நிறுவனர் விட்டாலிக் ரூ.7,300 கோடி நன்கொடை கொடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது இவருக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அம்பானி கடந்த வருடம் 500 கோடி கொடுத்தாலும், இந்த வருடம் அம்பானி எதுவும் செய்யவில்லை என பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், ரஷ்யாவில் பிறந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவரான விட்டாலிக் தனது 19 ஆவது வயதில் எதிரியம் கிரிப்டோகரன்சியை உருவாக்கினார்.
சிறந்த புரோகிராமரான இவர் பணப்பரிவர்த்தனையில் வங்கிகளிடம் அதிகாரம் செல்லாமல், அவை பணம் புழங்கக் கூடிய மக்களிடமே பரவலாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கிரிப்டோகரன்சியை உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.