நீ முதல்ல அதை செய்.. படிக்கல்லின் சதத்திற்கு பின் கோலி கூறிய பதில்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் தொடரின் 16-வது ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது.
இதையடுத்து, டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினர்.
ஆரம்பத்திலிருந்தே இருவரும் அதிரடி காட்டினர். விராட் 47 பந்துகளுக்கு 72 ரன்கள் எடுத்தநிலையிலும், படிக்கல் 52 பந்துகளுக்கு 101 ரன்கள் எடுத்து முதல் ஐபிஎல் சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்நிலையிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 16.3 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
வெற்றிக்கு பிறகு பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, நேற்றைய ஆட்டத்தின்போது படிக்கல் என்னிடம், இன்னும் பல சதங்கள் எனக்கு கிடைக்கும், எனவே நீங்கள் ஆட்டத்தை முடித்துவிடுங்கள் என்று கூறினார்.
ஆனால், நான் அதற்கு, நீ முதலில் சதத்தை பூர்த்தி செய்துவிட்டு பின் அதனை கூறு என கூறினேன். ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் பட்டிக்கல்லுக்கு அந்த சதம் நிச்சயம் கிடைக்க வேண்டிய ஒன்று.
அவர் கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை துவங்கியுள்ளார். இவர் இதைப்போலவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என பேசினார் விராட் கோலி.