செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தட்டைப்பயறு குழம்பு... இப்படி செய்தால் கொஞ்சமும் மிஞ்சாது!
பொதுவாகவே ஆரோக்கியமான தானியங்களின் பட்டியலில் தட்டைப்பயறு முக்கிய இடம் வகிக்கின்றது.இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பி வைட்டமின்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.
இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரியும். குறிப்பாக வயதாகும் போது உண்டாகிற கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்கும்.

மேலும், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்திருப்பதால், நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
அது மாத்திரமன்றி குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க உதவி செய்யும். தட்டைப்பயறில் உள்ள கரோட்டினாய்டுகள், ஃபிளவனாய்டுகள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.
அதனால் தினசரி உணவில் தட்டைப்பயறு சேர்த்துக்கொள்வது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் தட்டைப்பயறில் அசத்தல் சுவையில் குழம்பு செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு தேவையானவை
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
கல்பாசி - சிறிது
தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தட்டைப்பயறு - 1 கப் (8 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
உருளைக்கிழங்கு - 2 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
அரைத்த தேங்காய் விழுது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை
செய்முறை முதலில் தட்டப்பயறை 8 மணி நேரம் நீரில் ஊறவைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, கிராம்பு, பட்டை மற்றும் கல்பாசி ஆகியவற்றை சேர்த்து, சிறிதளவு நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கவும். அதன் பிறகு இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
அடுத்து மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூளை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். பின்னர் ஊறவைத்த தட்டப்பயறை சேர்த்து, தோல் நீக்கி துண்டுகளாக்கிய 2 உருளைக்கிழங்குகளையும் சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு கிளறவும்.

பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பி்ன்னர் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறி, குக்கரை மூடி 3–4 விசில் வரும் வரை வேகவிடவும்.
விசில் முழுவதும் அடங்கியதும் குக்கரைத் திறந்து, மேலே கொத்தமல்லித்தழை தூவி கிளறினால் அவ்வளவு தான் அருமையான சுவையில், ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் தட்டப்பயறு குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |