மாணவர்களின் வங்கிக் கணக்கில் 900 கோடியா? ஆச்சரியத்தில் பெற்றோர்
இந்தியாவில் இரண்டு மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 900 கோடி பணம் இருந்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரில் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், பள்ளி சீருடைக்கான அரசு உதவித்தொகை வந்துள்ளதா என, பொது 'இன்டர்நெட்' மையம் வாயிலாக, உத்தர் பீஹார் கிராமிய வங்கியில் உள்ள தங்கள் கணக்கை பார்த்துள்ளனர்.
அதில், ஆறாம் வகுப்பு படிக்கும் ஆஷிஷ் என்ற மாணவரின் வங்கிக் கணக்கில் 6.2 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொரு மாணவரான குருசரண் விஷ்வாஸ் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆனந்த அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில், இந்த விடயம் ஊரில் உள்ள மக்களுக்கும் அனைவரும் தங்களது வங்கிக்கணக்கினை சோதனை செய்ய ஏடிஎம்-ல் முண்டி அடித்துள்ளனர்.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் உதயன் மிஸ்ரா கூறியுள்ளதாவது: வங்கியைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தோம். சில தொழில்நுட்பக் கோளாறுகளால் அந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் அவர்களது கணக்கில் அந்தப் பணம் இல்லை. இருப்பினும் அனைத்து கணக்குகளையும் சரிபார்க்க வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.