கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய பேராசிரியர்.. பின்பு வெளிச்சத்திற்கு வந்த உண்மை
கல்லூரி மாணவியைக் காதலித்து அவரைத் திருமணம் செய்தது போன்று சான்றிதழ் தயாரித்து மிரட்டிய கல்லூரி பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் மீனாட்சி கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ்குமார்.
அய்யப்பன்தாங்கலை சேர்ந்த இவருக்கும், தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் உருவாகியுள்ளது. இந்நிலையில், சதீஷ்குமாரின் நடவடிக்கைகள் தவறாக இருந்ததால், அவருடன் பழகுவதை, மாணவி நிறுத்தியுள்ளார். ஆனால், சதீஷ்குமாரோ, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை தொந்தரவு செய்துள்ளார்.
சதீஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும், ஒரு குழந்தை இருப்பதையும் சுட்டிக்காட்டி, மாணவி எச்சரித்துள்ளார். பேராசிரியர் என்ற போர்வையை பயன்படுத்தி, மாணவியின் குடும்பத்தினரிடமும் சகஜமாக குடும்ப நண்பர் போல் பழகி வந்த சதீஷ்குமார், தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தில்லு முல்லு வேலையில் ஈடுபட்டுள்ளார்.
மாணவியின் சான்றிதழ்களை திருடி, இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது போல் போலியாக சான்றிதழ் தயாரித்த அவர், அதனை வைத்து மாணவியை மிரட்டி வந்துள்ளார். மிரட்டலுக்கு மாணவி அடிபணியாததால், குடும்பத்தினரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு போலி திருமணச் சான்றிதழை அனுப்பி வைத்துவிட்டு, தன்னுடன் சேர்ந்து வாழவில்லையென்றால், இந்த போலி சான்றிதழை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தியாகராயர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க, போலியாக ஆவணங்களை புனைதல், போலி ஆவணங்களின் மூலம் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.