இந்தியா டெஸ்டில் இதுவே முதல் முறை.. வித்தியாசமான வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி!
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்பு நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற, இரு அணிகளும் கடுமையாக போராடி வருகிறது. இந்த போட்டியில், முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்தது.
அதைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில், முதலில் ஆடிய இந்திய அணியில், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இளம் வீரரான ரிஷப் பண்ட் மட்டும் தனியாளாக, அதிரடியுடன் ஆடி ரன்கள் குவித்தார்.
கடைசி வரை களத்தில் நின்ற அவர், 100 ரன்கள் எடுத்து அசத்தினார். கடந்த போட்டியில், தன் மீது இருந்த விமர்சனங்களை இந்த போட்டியில், தவிடு பொடி ஆக்கினார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே, முதல் முறையாக ஒரு சம்பவம், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் அரங்கேறியுள்ளது. அவை, இந்திய அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட்டான நிலையில், 20 விக்கெட்டுகளுமே கேட்ச் மூலம் தான் அவுட்டாகியுள்ளது.
மற்றபடி, போல்டு, எல்.பி.டபுள்யூ என எந்த முறையிலும் இது நிகழவில்லை. இந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவத்தை செய்துள்ளது இந்திய அணி. இதற்கு முன்பாக ஒரு அணியின் 19 விக்கெட்டுகள் கேட்ச் மூலமாக ஆட்டமிழந்திருக்கின்றனர்.
5 முறை அதுமாதிரி நடந்திருக்கிறது. ஆனால் 20 விக்கெட்டுகளும் கேட்ச் மூலமாக விழுந்தது இதுவே முதல் முறை.