முடிந்தது 4 ஆண்டு சிறை தண்டனை.. விடுதலையாகிறார் சசிகலா; பெரும் எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்ட இருக்கும் நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பெங்களுருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா தற்போது சிகிச்சைபெற்றுவரும் நிலையில், சசிகலாவின் 4 ஆண்டுகால தண்டனை காலம், நாளையுடன் நிறைவடைகிறது. இதனால், கர்நாடக உள்துறை அமைச்சகம் சசிகலாவை விடுதலை செய்ய அனுமதி அளித்துள்ளது.
ஆனால் அவர் தற்போது மருத்துவமனையில் இருப்பதால், நாளை காலை 9.30 மணி அளவில் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கே சென்று விடுதலை பத்திரத்தில் சிறைத்துறையினர் கையொப்பம் பெற உள்ளனர். மேலும், அதனை தொடர்ந்து அவர் காலை 10.30 மணியளவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் 2 வார காலம் தனிமையில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
அவர் பெங்களூருவிலேயே ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலா அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நபர் என்பதால், சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்படுகிறது.