கொரோனாவால் எங்கள் குடும்பம் பாதித்தது.. தமிழக வீரர் அஷ்வின் அளித்த பகீர் தகவல்!
ஐபிஎல் 14-வது சீசன் கொரோனா காரணமாகக் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னதாகவே டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடரிலிருந்து வெளியேறினார்.
அப்போது, இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதன் காரணமாகத்தான் தொடரிலிருந்து விலகினார் என காரணம் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது, குடும்பத்தினருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அஸ்வின், தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ மூலம் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தேன். அந்த சமயத்தில் எனது குழந்தைகளுக்குத் தீவிர காய்ச்சல், மற்றும் 3-4 நாட்களாக வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.
மேலும், எனது மனைவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மருந்துகள் கொடுத்துள்ளார். ஆனாலும், காய்ச்சல் குறையவில்லை, அதன்பிறகு எனது மொத்த குடும்பத்திற்கும் உடல்நிலை பாதித்தது. எனது தந்தை முதல் 5 நாட்கள் நன்றாகத்தான் இருந்தார்.
பின்னர் அவருக்கு ஆக்ஸிஜனின் அளவு குறையத் தொடங்கியது. மீண்டும் ஆக்ஸிஜம் அதிகரிக்கவே இல்லை. அதன்பின், 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
தற்போது நலமாக இருக்கிறார். நான் உங்களுக்கு ஒன்றை உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். எனது தந்தையைக் காப்பாற்ற முக்கிய காரணமாக இருந்தது தடுப்பூசிதான்.
தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். எவ்வித அறிகுறி இல்லை, நமக்கு கொரோனா வராது என இருக்காதீர்கள்.
உங்களால் உங்கள் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம். அதனால், தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.