விரைவில் வரும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.., பழைய காகித நோட்டுகள் செல்லுமா?
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை காகிதத்துக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களில் அச்சிடும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி முன்னெடுத்து வருகிறது.
முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட்டு, அடுத்த ஆண்டு சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 100 கோடி ரூ.10 நோட்டுகள் மற்றும் 100 கோடி ரூ.20 நோட்டுகள் அச்சிடப்பட உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.3,000 கோடியாக இருக்கும்.
பிளாஸ்டிக் நோட்டுகளுக்கான சோதனையை தொடங்க ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாக நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சோதனை முயற்சியாக பிளாஸ்டிக் நோட்டுகள், காகித நோட்டுகளுடன் சேர்த்தே புழக்கத்தில் விடப்படும்.
இந்த முயற்சி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் பிளாஸ்டிக் நோட்டுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கும்.

ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் அடிக்கடி கைமாறுவதால் விரைவில் சேதமடைவதால், நீண்ட காலம் நீடித்து எளிதில் பாதிக்கப்படாத பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிக்க ஆரம்பத்தில் செலவு அதிகமாக இருந்தாலும், அவை நீண்ட காலம் பயன்பாட்டில் இருப்பதால் அச்சிடும் செலவை குறையும்.
மேலும், பிளாஸ்டிக் நோட்டுகளில் அதிக பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க முடியும் என்பதால் கள்ளநோட்டுகளைத் தடுக்கவும் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.