உலகையே அச்சுறுத்திய பெகாசஸ் விவகாரம்.. பூதாகரமாக வெடித்த அடுத்த பிரச்சினை! ஆடிப்போன 10 பிரதமர்கள்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் 'பெகாசஸ்' உளவு செயலி விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவை, இந்தியாவை உலுக்கி வரும் நிலையில், உலக அளவிலும் இந்த உளவு செயலியின் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட 10 நாடுகளின் பிரதமர்கள், 3 அதிபர்கள், ஒரு நாட்டின் மன்னர் உள்பட பலர் உளவு பார்க்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் அமைச்சர்கள் உள்பட 15 பேர் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதால் பிரான்ஸ் அரசு தனி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ஈராக் அதிபர் பர்ஹாம் சாலிஹ் மற்றும் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா ஆகியோரும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவர்களின் செல்போன்கள் எப்படி இரையானது என்ற விவரம் தெரியவில்லை.
இதனிடையே, பொது வெளியிலும், செய்தியாளர்கள் மூலமும், அரசு செய்திக் குறிப்புகளிலும் வெளியான இவர்களின் செல்போன் எண்கள் மூலமாக இவர்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.