உடல் வெப்பத்தினை தணிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
கோடைக் காலத்தில் மட்டுமல்ல இப்போதும் கூட நம் ஊரில் வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் உள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை நாம் புறக்கணித்தால் அது மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்திவிடலாம். போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, சரியான உணவை சாப்பிடாதது போன்றவை உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உடலுக்கு குளிர்ச்சி தந்து, உடலைப் பாதுகாக்கும் இயற்கை உணவுகளைப் பற்றிப் பார்ப்போம்.
கார்பனேட்டட் குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள ஜூஸ் அருந்துவதற்கு பதில் இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. அது உடலை குளிர்ச்சியடைய செய்வதுடன் உடலின் நீர்ச்சத்தைச் சமநிலையில் வைக்க உதவுகிறது. இயற்கை முறையில் உடலுக்குத் தேவையான எலெக்ட்ரோலைட் கிடைத்துவிடுகிறது.
தினமும் மோர் அருந்தி வருவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். மேலும், மோரில் உள்ள ப்ரோபயாடிக், வைட்டமின்கள், தாது உப்புக்கள் உடலை குளிர்ச்சியுடைய செய்கின்றன. மேலும் உடலுக்கு புத்துணர்வும், ஆற்றலும் கிடைக்கும்.
கற்றாழை இயற்கை முறையில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடலின் அதீத வெப்பத்தைக் குறைக்கும். கற்றாழை ஜெல்லை சருமத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவு பெறும். மோரில் கற்றாழையைக் கலந்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும், புத்துணர்வுடன் இருக்கலாம்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் மற்றொரு முக்கிய உணவு தர்பூசணி. அதே போன்று கிர்ணி பழமும் உடலுக்கு குளிர்ச்சியும் எனர்ஜியும் அளிக்கும். புதினா கூட உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும். உணவில், குளிர்பானத்தில் புதினாவை சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
கோடைக் காலத்தில் மட்டுமின்றி தற்போதும் கூட வெள்ளரிக் காய் கிடைக்கும். இதை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். இதில் குறைவான கலோரி உள்ளது. எனவே, உடல் எடையைக் குறைக்க, உடலைக் குளிர்ச்சியாக வைக்க வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.
வெப்பத்தின் கொடுமையில் இருந்து தப்பிக்க பலரும் விரும்புவது எலுமிச்சை ஜூஸ். வைட்டமின் சி நிறைந்தது, உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. எலுமிச்சை சாறு பிழிந்து, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து ஜூஸ் ஆக அருந்தும் போது உடலுக்குத் தேவையான எலெக்ட்ரோலைட் கிடைத்துவிடுகிறது.
தினசரி வெந்தயத்தை சேர்த்துக்கொள்வது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து ஒரு டம்ளரில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தி, வெந்தையத்தை சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
இந்த இயற்கை உணவுகள் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலில் உள்ள உள் உறுப்புக்களைக் காக்கவும் செய்கின்றன. செரிமானத்தைச் சீராக்குகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. இதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது.