தாயை ஆம்புலன்ஸில் வைத்து 30 மருத்துவமனைக்கு சென்ற மகன்... இறுதியில் கண்முன்னே மரணித்த கொடுமை
இந்தியாவில் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட 75 வயது மூதாட்டி சிகிச்சை கிடைக்காமல் மகன் கண்முன்னே உயிரிழந்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பிவரும் நிலையில் நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மைசூரு டவுன் ஆலனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரம்மா(75), வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
உடனே சுந்தரம்மாவை அவரது மகன் நிகில் மீட்டு ஆம்புலன்சில் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்தாலும், ஆனாலும் படுக்கை எதுவும் காலியாக இல்லை என்று மூதாட்டிக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனை மறுத்துள்ளது.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக சுந்தரம்மாவை 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸிலேயே அழைத்துச் சென்ற நிலையில் எங்கும் படுக்கை வசதி, வெண்டிலேட்டர் இல்லாததால் சிகிச்சை அளிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் ஆம்புலன்சில் வைத்து நிகில் கண்முன்னே சுந்தரம்மா இறந்ததையடுத்து, மகன் கதறியழுதுள்ளார்.
பின்னர் அவரது உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதிசடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.