குட்டிகளை காப்பாற்ற பட்டினியால் உயிரையே விடும் ஆக்டோபஸ்! பலரும் அறியாத உண்மை
உலகில் அதிக தியாகம் செய்யும் தாய் பெண் ஆக்டோபஸ் ஆகும். ஏனெனில் ஒரே நேரத்தில் சுமார் 50 ஆயிரம் முட்டைகளை இடுகின்றது.
தொடர்ந்து 6 மாதங்கள் வரை அவைகளை பாதுகாக்கும். அந்த காலகட்டத்தில், முட்டைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தாய் எந்த உணவையும் சாப்பிடுவதைத் தவிர்த்து இருக்கும்.
6 மாதங்களுக்குப் பிறகு, முட்டைகள் பொரிந்து தாய் பட்டினியால் இறந்துவிடும்.. அதனால் தான் பெண் ஆக்டோபஸ் உலகின் மிகவும் தியாகம் செய்த தாய் என்று அழைக்கப்படுகிறது.
ஆக்டோபஸ் குறித்து மேலும் சில தகவல்கள்
எட்டுக் கைகள் கொண்ட ஒரு நீர்வாழ் உயிரி. இவற்றின் திறமைகளும் இயற்கை அவற்றின் உடலமைப்பில் ஏற்படுத்தியுள்ள அதிசயத் தன்மைகளும் நம்மை வியப்படையச் செய்கின்றன.
எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள தன் உடலைச் சுருக்கி, சிறிய பாறை இடுக்கிலும் நுழைந்து தப்பிக்கும் ஆற்றல் கொண்டது.
தன் அருகே வரும் எதிரியின் தன்மை மற்றும் அவற்றின் பழக்கவழக்கங்களையும் நினைவில் வைத்து செயல்படுபவை.
இவற்றின் உருமறைப்புத் தன்மை நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்கிறது. எதிரி வருவதைப் பார்த்தவுடன் தன்னைச் சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றாற்போல தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை ஆக்டோபஸிடம் உண்டு.
தன்னைச் சுற்றியுள்ள சூழலின் நிறத்தை ஆக்டோபஸ் தன் தோல் மூலம் அறிகிறது. அதாவது ஆக்டோபஸால் கண்களால் மட்டுமல்ல தனது தோலாலும் பார்க்க முடியும்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் ஆக்டோபஸின் தோலில் உள்ள புரோட்டின் அதன் கண்களில் உள்ள புரோட்டினை ஒத்தது என்றும், அது ஒளியை உணரும் ஆற்றலுடையது என்றும் கண்டறிந்திருக்கின்றனர்.