ஐபிஎல் தொடரிலிலிருந்து நடராஜன் விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இரண்டு போட்டிகளில் மட்டுமே நடராஜன் விளையாடினார். பின்பு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தற்போது அவருக்கு காயம் அதிகமாக இருப்பதால், இப்போது நடக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து விலக நேரிடலாம் என்று தகவல் வெளியானது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில், ’காயம் காரணமாக நடராஜன் அடுத்த சில போட்டிகளில் ஆட மாட்டார் என்றும் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இன்னும் ஒருவார காலம் அவர் கட்டாயம் ஓய்வில் இருக்கவேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் சிகிச்சைக்கு பின்பு அவர் தனிமைப்படுத்துதல் காலம் இருக்கும் என்பதால், அவரது உடல்தகுதியினை நிரூபித்த பின்பே அணியில் சேரமுடியும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நடராஜன் உடல்நிலை குறித்து அறிக்கை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் காயம் பெரிதாக இருந்தால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று கிரிக்கெட் அகாடமி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.