Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது?
இந்தியாவை 300 ஆண்டு காலம் ஆட்சி செய்த முகலாய வம்சம் இந்திய கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் இந்திய உணவுமுறையிலும் பெருமளவில் தாக்கம் செலுத்தயது.
இப்போது பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக இருக்கும் பிரியாணி முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? உலகளவில் பிரசித்தி பெற்ற முகலாயர்களின் ரகசிய மசாலாக்களுக்கு இன்றளவும் மதிப்பு குறையவே இல்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக அசைவ பிரியர்களின் விரும்ப பட்டியலில் முதலிடம் வகிக்கும் சிக்கனை முகலாயர்களின் பாணியில் எவ்வாறு ராஜ விருந்தாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெய் - 3 மேசைக்கரண்
பெரிய வெங்காயம் - 4(பெரியது)
பால் அல்லது தேங்காய் பால் - ½ கப்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மேரினேட் செய்ய தேவையானவை
சிக்கன் - 1 கிலோ
தயிர் - ½ கப் (புளிக்காத கெட்டி தயிர்)
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் - ½ தே.கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி
வறுத்து அரைக்க தேவையானவை
பாதாம் - 25 கிராம்
முந்திரி - 25 கிராம்
கொத்தமல்லி விதை - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
பட்டை - 1
சோம்பு - 1 தே.கரண்டி
மிளகு - ½ தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 4
செய்முறை
முதலில் சிக்கனுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் புளிக்காத கெட்டி தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்துவி்டடுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து, இந்த கலவையை குறைந்தது 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கொத்தமல்லி, பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து,அதனுடன் ஏலக்காய், கிராம்பு, பட்டை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக சோம்பு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருக விட்டு, அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதே நெய்யில் மேரினேட் செய்து ஊற வைத்த சிக்கனை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்கு வதக்கி, அதில் அரைத்து வைத்த பொடி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, நன்றாக வேகவிட்டு இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் அவ்வளவு தான், அட்டகாசமான சுவையில் முகலாய சிக்கன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |