எஸ்கேப் ஆன காதலி! அத்தை பெண்ணை திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்
திண்டிவனம் அருகே திருமணமாகி 3 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தில் ஓட்டம் பிடித்த காதலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் (26). இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 23-ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், குறித்த பெண்ணை வேறு ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால் உறவினர்கள் அவசர அவசரமாக ஏப்பாக்கத்தில் உள்ள குமரேசனின் அத்தை மகளை அதே தேதியில் அதே திருமண மண்டபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு குமரேசன் பெண்ணின் வீட்டிற்கு செல்லாமல் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார்.
திடீரென தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்று மதியம் புதூர் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்ற குமரேசன் வயலிலிருந்த வேப்ப மரத்தில் கயிரால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து வெள்ளிமேடு பேட்டை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணமாகி 3 நாட்களே ஆன புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.