காதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த நபர்; அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கொட்டாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவருக்கும், திண்டிவனம் வண்டாரம்பட்டு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (25) என்ற பெண்ணும் காதலித்து கடந்த 2010 இல் திருமணம் செய்துகொண்டனர்.
இதனிடையே, ராஜேஷுக்கு சென்னையில் எலக்ட்ரீசியன் வேலை கிடைத்ததால், மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு அவர் சென்னைக்கு சென்றுள்ளார். இதன்பின்பு வீட்டிலிருந்த மஞ்சுளா கர்ப்பமாகியுள்ள நிலையில், அப்போது திண்டிவனம் வந்த ராஜேஷ், மனைவிக்கு கருத்தடை மாத்திரைகளை வாங்கிக்கொடுத்துள்ளார். அதன் பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு மனைவியுடன் சென்னைக்கு வந்தவர், அங்கு வாடகை வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், வேலைக்கு சென்று இடத்தில் ராஜேஷுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனைவி மஞ்சுளாவை அழைத்துக்கொண்டு மீண்டும் திண்டிவனத்தில் விட்டு வந்துள்ளார் ராஜேஷ். சில நாட்கள் கழித்து இரண்டாவதாக காதலித்த அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்த விஷயம் மஞ்சுளாவுக்கு தெரிய வந்ததும் உடனே சென்னைக்கு வந்து கணவனிடம் முறையிட்டுள்ளார். அப்போது, மஞ்சுளாவின் சாதி பெயரை கூறி திட்டிய ராஜேஷ், அடித்து திண்டிவனத்துக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால், வேதனையுடன் சொந்த ஊருக்கு வந்த மஞ்சுளா சம்பவம் குறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அனைத்து சாட்சியங்களும் நிரூபணமான நிலையில் தண்டனையை அறிவித்த நீதிமன்றம், ராஜேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், ரூ, 1,000 அபராதத்தையும், மஞ்சுளாவுக்கு ரூ. 2 லட்சம்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.