மலையின் உச்சியில் ஏறி காதலை தெரிவித்த இளைஞர்: சில நிமிடங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட விபரீதம்
ஆஸ்திரியா நாட்டின் கரிந்தியா என்னும் பகுதியில் பால்கார்ட் என்னும் மலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு மிக உயரமான அந்த மலையின் மீது வைத்து 27 வயது இளைஞர் ஒருவர், தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, திடீரென காதலனின் செயலால் ஆச்சரியத்தில் உறைந்து போன அந்த பெண்ணும், காதலை மனதார ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதன்பின்னர், சில நிமிடங்களிலேயே இருவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. மலையின் உச்சியில் இருந்த பெண், அங்கிருந்து தவறி கீழே விழ, தனது காதலியைக் காப்பாற்ற இளைஞரும் அங்கிருந்து குதித்துள்ளார்.
மேலும், காதலர்களாக மாறிய சில நிமிடங்களில் நடந்த இந்த சம்பவம் பெரும் துயரத்தில் முடியுமோ என அச்சம் எழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர்.
அந்த பெண் குதித்த போது, சுமார் 200 மீ கீழே இருந்த பனி படர்ந்திருந்த பகுதியில் விழுந்ததால் உயிர் பிழைத்தார். பெண் ஒருவர் உயிருக்கு போராடுவதைக் கண்ட நபர் ஒருவர், போலீஸ் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த அதிகாரிகள் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.
மேலும், அந்த இளைஞரும், சுமார் 50 மீ தொலைவில் ஒரு பகுதியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், ஹெலிகாப்டர் உதவியுடன் அந்த இளைஞரை போலீசார் பத்திரமாக மீட்டனர். இளைஞரின் முதுகெலும்பு பகுதியில் மட்டும் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், அவர்கள் இருவரும் அதிர்ஷ்டசாலிகள். பனிப்பொழிவு அதிகம் இருந்ததால் அந்த பெண் உயிர் பிழைத்தார். இல்லையெனில், நிலைமை தலை கீழாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்