கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்.. மும்மடங்கு முழு ஊரடங்கு அமல்!
கொரோனா வைரஸ் ஆனது கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 87 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 634 வார்டுகளில் மும்மடங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையவில்லை. கடந்த பல வாரங்களாக தினசரி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால், தொற்றின் சதவீதம் 14க்கு மேல் உள்ளது. இதற்கிடையே நேற்று 21,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தொற்று சதவீதம் 14.73 ஆகும். நோய் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய நிபுணர் குழு பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.
அப்போது நோய் பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் குழு கேரள சுகாதாரத்துறையினரிடம் தெரிவித்தது. இதையடுத்து கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு தீர்மானித்தது.
அதன்படி நோய் பரவல் அதிகமாக உள்ள இடங்களில் ஊரடங்கு நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தொற்று சதவீதம் 8க்கு மேல் உள்ள பகுதிகளில் மும்மடங்கு முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கேரளாவில் 87 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 634 வார்டுகளில் மும்மடங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த பகுதிகளில் கடும் நிபந்தனைகள் அமலில் இருக்கும் என்று சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.