குரு பெயர்ச்சி பலன் 2021: அஷ்டம சனியோடு நீச்சமாக இருந்த குருவால் காத்திருக்கும் பேரதிர்ஷடம் (மிதுன ராசி)
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.
இதுவரை மிதுன ராசிக்கு அஷ்டம சனியோடு, குருவும் நீச்சமாக இருந்ததால், இதுவரை சொல்லில் அடங்காத துன்பத்தை அனுபவித்து வந்தனர்.
உங்களின் நற்பெயர் கெடுதல், அவமானம், ஆன்மிகவாதிகளுக்குச் சோதனைகள், உடல் ஆரோக்கியம் பாதித்தல், பொருளாதார பாதிப்பு என பல பிரச்னைகளை சந்தித்திருப்பார்கள்.
கால புருஷ தத்துவத்தின் படி குரு பகவான் 11ம் வீடான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதுவரை குரு சனி பகவானின் வீடான மகரத்தில் முழு நீச்சமாக இருந்தார். தற்போது சமம் என்ற இடத்திற்கு செல்ல உள்ளார்.
குரு பெயர்ச்சியால் அற்புத பலன்களைப் பெறப்போகும் அடுத்த ராசி மிதுனம்.
- ஏற்கனவே அஷ்டம சனியால் குடும்பத்தில் கஷ்டம், விபத்து, வேலையின்மை என மிக கடினமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு, குருவின் 5ம் பார்வை உங்கள் மீது விழுவதால் மிக சிறப்பான பலனைப் பெற உள்ளீர்கள்.
- இதனால் அஷ்டம சனி கஷ்டங்கள் பெருமளவு குறையப்போகிறது என்று சொன்னால் மிகையல்ல.
- பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, 10க்கு உடைய ராசி அதிபதி உங்கள் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களின் தேக்கங்கள் நீங்கும்.
- இந்நிலையில் குரு உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் அமர்வதாலும், உங்கள் ராசியை குரு 5ம் பார்வையாக பார்ப்பதால் மிகப்பெரிய வலிமையும், அதிர்ஷ்ட பலன்களும் உங்களுக்கு ஏற்படும்.
- கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்தல், ஆன்மிக நாட்டம் கொள்ளுதல், மகான்களின் ஆசி பெறுதல் என நன்மை உண்டாகும்.
- மிதுன ராசியைச் சேர்ந்தவருக்கோ அல்லது மிதுன ராசி பெற்றோர் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்ற மனக்கவலையில் இருந்தால், இந்த குரு பெயர்ச்சி காலத்தில் விரைவாக நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும்.
குடும்பம்
குழந்தை வரத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். பெரியவர்களின் அருள், ஆசி கிடைக்கும்.
முன்னோர்களின் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். சொத்து வாங்குதல், விற்றல் வகையில் உங்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான முன்னேற்றங்களை அடைவீர்கள்.
ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளுக்கு வெற்றி கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்வதால் உங்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பதவி கிடைக்கும்.
உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய கெளரவம் தேடிவரும்.
நீங்கள் செய்ய வேண்டியது கடின உழைப்பு மட்டும் தான்.
தொழில்
தொழில், வியாபாரத்தில் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும், உங்களுடன் இருப்பவர்களால் உங்களின் பெயர் கெடக்கூடிய வாய்ப்பு உள்ளது.
வேலை நிமித்தமாக சில அவமானங்கள் ஏற்படலாம். வெளிநாடு தொடர்பான தொழில், வியாபாரம், வேலைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, அவர்களின் முயற்சியும், கனவும் பலிக்கும்.
இந்த காலகட்டத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் உங்களின் மகிழ்ச்சி, குடும்ப நிம்மதியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.