வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பும்ரா வேண்டாம்! கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி முடிவு;
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய அணி பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பிப்ரவரி 6-ம் தேதியில் பங்கேற்க உள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா அணிக்கு திரும்புகிறார்.
இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை தேர்வு செய்யும் கூட்டம் மும்பையில் நடைபெற்றுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடருக்கு தேவையான வீரர்களை அவராகவே முன்வந்து கேட்டு வாங்கியதாகத் தெரிகிறது.
மேலும், வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடருக்கு வேண்டாம் என வெளிப்படையாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால், தென்னாப்பிரிக்க தொடரின் போது மூன்று ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பும்ரா பெரியளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை.
இதனால், பும்ரா உறுதியான மனநிலையுடன் இல்லை என்பதால் தற்போது ஓய்வு மிகவும் அவசியம் என்பதால் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் இலங்கை தொடரில் அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று ரோஹித் சர்மா பேசியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இவர் மட்டுமின்றி அஷ்வின் மற்றும் புவனேஷ்வர் குமார் இடம் பெறமாட்டார்கள் என கூறப்படுகிறது.
அவர்களுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ராகுல் சாகர் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் மற்றும் தமிழக ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்புகிறார்கள்.