சிக்கன் எடுத்தால் ஒருமுறை இப்படி கோலா உருண்டை செய்து சாப்பிடுங்க... அட்டகாசமான ரெசிபி இதோ
சுவையான சிக்கன் கோலா உருண்டை செய்வது எப்படி? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அசத்தலான ரெசிபி...
சிக்கன் சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கோழியை விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் புதுவிதமாக சிக்கனை சமைத்து கொடுத்தால் சொல்லவா வேண்டும், ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.
அந்தவகையில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால் அனைவரும் சாப்பிடும் வகையில் சுவையான இந்த சிக்கன் கோலா உருண்டை செய்து கொடுத்து பாருங்கள், எவ்வளவு செய்தாலும் உடனே காலியாகிவிடும்... வாங்க எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
முந்திரி - 20
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 15 பல்
இஞ்சி துண்டு - 1
வரமிளகாய் - 3
கொத்தமல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 6
ஏலக்காய் - 3
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கொத்தமல்லி விதைகள், வரமிளகாய், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்து ஆறவைத்து கொள்ளுங்கள்.
அடுத்து மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வறுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், அலசிய சிக்கன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக பிரட்டிக் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியே ஒரு தட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் வாணலி வைத்து கோலா உருண்டை பொரிப்பதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும் உருட்டிய உருண்டைகளைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான சிக்கன் கோலா உருண்டை சாப்பிட ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |