இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் மனைவி... திடீரென உயிருக்கு போராடிய அவலம்
தமிழகத்தில் தூங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே உள்ள கென்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சம்சுதீன் (30). மலிகை கடை நடத்தி வரும் இவர் வழக்கம் போல் வியாபாரத்தினை முடித்து வீடு திரும்பியுள்ளார்.
இவரது மனைவி ரெஜினா பேகம் (25). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். வீட்டிற்கு வந்ததும் குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற போது வெளிச்சத்திற்காக அருகில் சிமிளி விளக்கினை ஏற்றி வைத்துள்ளனர்.
அப்பொழுது தூக்கத்தின் போது விளக்கில் தெரியாமல் கைப்பட்டு, கீழே விழுந்ததால் அதிலிருந்த மண்ணெண்ணை கீழே கொட்டி தீப்பற்றியது. இதில் ரெஜினாவின் மீது தீப்பிடிக்க தூக்கத்தில் இருந்தவர் பின்பு கூச்சலிட்டுள்ளார்.
பின்பு அவரைக் காப்பாற்ற முயன்ற சம் சுதீன் உடலிலும் தீப்பற்றியுள்ளது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதில் சிகிச்சை பலனின்றி ரெஜினா நேற்று உயிரிழந்த நிலையில், இன்று அவரது கணவர் சம்சுதீனும் உயிரிழந்துள்ளார்.
எதிர்பாராத நிலையில், அடுத்தடுத்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளது அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.