சம்பளத்தை கொரோனா நிதியாக கொடுத்த காவலாளி... நேரில் அழைத்து ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்படுகிறது.
எனவே, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொது மக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவுக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், இரவு நேரக் காவல் பணி புரியும் தங்கதுரை என்பவர் தனது ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அவர் ஸ்டாலினை சந்தித்து இந்த நிவாரண நிதியை கொடுக்க முயன்றதாகவும், ஆனால் முதல்வரை அவரால் சந்திக்க முடியாமல் கணக்கில் செலுத்தி விட்டு திரும்பியுள்ளார்.
இதனையறிந்த முதல்வர் ஸ்டாலின், தங்கதுரையை நேரில் அழைத்து பாராட்டியதுடன், கலைஞர் உரையில் மனிதம் போற்றும் திருக்குறள் நூலை வழங்கி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்கதுரை இரவெல்லாம் காவல் பணியில் ஈடுபட்டு பெற்ற ஊதியத்தை என்னிடம் வழங்க முடியாமல் #Donate2TNCMPRF கணக்கில் செலுத்திவிட்டு திரும்பியதை அறிந்து நெகிழ்ந்தேன்.
அவரை நேரில் அழைத்து, தலைவர் கலைஞர் உரையில் மனிதம் போற்றும் திருக்குறள் நூலை வழங்கி நன்றி கூறினேன்! தங்கமனம் வாழ்க!” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
திரு. தங்கதுரை இரவெல்லாம் காவல் பணியில் ஈடுபட்டு பெற்ற ஊதியத்தை என்னிடம் வழங்க முடியாமல் #Donate2TNCMPRF கணக்கில் செலுத்திவிட்டு திரும்பியதை அறிந்து நெகிழ்ந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) May 14, 2021
அவரை நேரில் அழைத்து, தலைவர் கலைஞர் உரையில் மனிதம் போற்றும் திருக்குறள் நூலை வழங்கி நன்றி கூறினேன்!
தங்கமனம் வாழ்க! pic.twitter.com/3hAlg2Kc6d