மரணப்படுக்கையில் நண்பனுக்கு கொடுத்த வாக்கு... திருமணத்தில் முடிந்த 21 வருட காதல்
கேரளாவில் 67 வயது முதியவருக்கும், 65 வயது பெண்ணுக்கும் முதியோர் இல்லத்தில் திருமணம் நடந்த நிலையில் பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினார்கள். திருச்சூரை சேர்ந்தவர் லஷ்மி அம்மாள் (65). இவரின் கணவர் 21 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். சமையல் பணி செய்து வந்த அவரின் உதவியாளராகவும், நண்பராகவும் கோச்சானியன் (67) என்பவர் இருந்தார்.
லஷ்மியின் கணவர் மரணப்படுக்கையில் இருந்த போது என் மனைவிக்கு வெளி உலகம் பெரிதாக தெரியாது, என் இறப்புக்கு பின்னர் நீ தான் என் மனைவியை கவனித்து கொள்ள வேண்டும் என கோச்சானியனிடம் கூறிவிட்டு மரணமடைந்தார். பின்னர் ஆண்டுகள் உருண்டோடின. இந்த சூழலில் இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் சந்தப்ப சூழ்நிலையால் பிரிந்தனர்.
பின்னர் லஷ்மி ஒரு முதியோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார். அதே முதியோர் இல்லத்துக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் கோச்சானியன் அழைத்து வரப்பட்டார். அங்கு இருவர் மனதிலும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து இருவருக்கும் நேற்றைய தினத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மணப்பெண் லஷ்மி கூறுகையில், எங்களுக்கு வயதாகி விட்டால் எவ்வளவு காலம் ஒன்றாக இருக்க முடியும் என தெரியவில்லை.
ஆனால் நாங்கள் சந்தோஷமாக இருப்போம், எனக்காக தற்போது ஒருவர் உள்ளார் என்ற உணர்வு மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.