வெளிநாட்டில் சாதிக்கும் தமிழச்சியின் வெற்றிக்கதை
கணவரின் வேலை நிமித்தம் துபாய்க்குக் குடியேறியவர் அனுராதா. நல்ல வேலையில் இருக்கும் கணவன், மூன்று குழந்தைகள் என்று குறையில்லாத வாழ்க்கை அனுராதாவுக்கு. முதலில் சிறிய அளவில் நர்சரிப் பள்ளியை நடத்தினார். இருந்தாலும் ஏதோவொரு போதாமை வாட்ட, அதைக் கணவரிடம் பகிர்ந்துகொண்டார். அந்தப் புள்ளியில் உதித்த எண்ணம் இன்று அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராகச் சுடர்விடச் செய்திருக்கிறது.
அனுராதாவின் தந்தை, பள்ளித் தலைமை ஆசிரியர். அம்மாவும் அக்காவும் ஆசிரியர்கள். அவர்களின் வழியைப் பின்பற்றி அனுராதாவும் கல்வித் துறை சார்ந்த பணியை மேற் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு கணவர் கங்காதரனுடன் துபாய்க்குச் சென்றார். “அங்கே நர்சரிப் பள்ளியைத் தொடங்க விரும்பினேன்.
அது அவ்வளவு சுலபமாக இல்லை. அதற்கென இருக்கும் தேர்வுகளை வெற்றிகரமாகக் கடந்து, ஒருவழியாகப் பள்ளியைத் தொடங்கிவிட்டோம். ஆப்ரிக்கா, பாகிஸ்தான், மொராக்கோ உள்ளிட்ட பல நாட்டுக் குழந்தைகளும் எங்களிடம் படிக்கிறார்கள்” என்கிறார் அனுராதா. வீட்டில் மூன்று குழந்தைகளைக் கவனித்துக்கொள்கிறவருக்குப் பள்ளியில் அவ்வளவு குழந்தைகளைச் சமாளிப்பது எளிதுதான் என்று புன்னகைக்கிறார். தமிழுக்கு மரியாதை கணவர் கைநிறைய சம்பாதித்தாலும் அதில் திருப்தி இல்லை என்று சொல்ல, இருவரும் என்ன செய்வது என்று யோசித்திருக்கின்றனர்.
துபாயில் தமிழ்க் கடைகள் சிறிய அளவிலேயே இருப்பதால் பெரிய அளவில் கடையைத் திறக்க முடிவெடுத்தனர். “துபாயில் நினைத்ததுமே கடையைத் திறந்துவிட முடியாது. குறிப்பாக, உணவு தொடர்பான தொழிலைத் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. ஏகப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள். ஒவ்வொன் றையும் பொறுமையாகக் கடந்துவந்தோம்.செயற்கை உணவுப் பொருள்களை எங்கள் கடையில் அனுமதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் இருவருமே உறுதியாக இருந்தோம்” என்று சொல்கிறார் அனுராதா.
இவர்களது கடை ‘சிறந்த இந்தியக் கடை’ என்கிற ஆர்ட்டிக் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. “இந்த அங்கீகாரத்துக்குப் பின்னால் பலரது உழைப்பு இருக்கிறது. எதுவுமே என் தனித்த வெற்றியல்ல” என்று சொல்லும் அனுராதா, துபாயில் தமிழ் கற்றுத்தரும் குழுவிலும் இருக்கிறார். “நாம் எங்கே சென்றாலும் தாய்மொழிக்குப் பிறகுதானே மற்ற அனைத்தும்.
அதனால், ‘அன்னை மொழி அறிவோம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, கட்டணம் இல்லாமல் தமிழ் பயிற்சி வகுப்பை நடத்திவருகிறோம். 10 தன்னார்வலர்கள் எங்களோடு இணைந்து பணியாற்றுகிறார்கள்” என்று சொல்லும் அனுராதா, வீடு, பள்ளி, கடை என்று நிற்க நேரமில்லாமல் சுழல்கிறார். இவை போதாதென்று, சிறுதானிய உணவின் மகத்துவத்தைச் சொல்வதற்காக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார்.
“இது போதும் என்று நாம் பின்னடைகிறபோது வாய்ப்பு தன் வாசல்கள் அனைத்தையும் மூடிக்கொள்ளும். தேடல் தொடங்குகிற போது வெற்றிக்கான புதிய பாதை திறக்கும்” என்று தன் வெற்றிக்கதையை இருவரியில் முடிக்கிறார் அனுராதா.
- Thehindu