இப்படி ஒரு நிலையை பார்த்தே இல்லை! கண்ணீருடன் எச்சரிக்கை விடுத்த பெண் மருத்துவர் வெளியிட்ட வீடியோ
அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென பெண் மருத்துவர் ஒருவர் கண்ணீருடன் பேசிய வீடியோ காட்சியானது வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பெண் மருத்துவர் திருப்தி கிலாடா என்பவர், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கண்ணீர் மல்க பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி, ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மருத்துவர்கள் அனைவருமே மன அழுத்தத்தில் இருப்பதாக கூறிய கிலாடா, கண்முன்னே நோயாளிகள் படும் கஷ்டத்தை பார்த்தும் உதவ முடியாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாகவே உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.