மாலத்தீவுக்கு சென்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மதுபாரில் சண்டை; வெளியான பரபரப்பு!
14-வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தவைக்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேச வீரர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பி இருந்தனர். இந்திய பயணிகள் விமானத்துக்கு ஆஸ்திரேலியாவில் வருகிற 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
இதனால், அவர்கள் அனைவரையும் கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. மாலத்தீவில் அவர்கள் தனிமையில் இருந்த பிறகு தங்களது நாட்டுக்கு திரும்ப முடிவு செய்து இருந்தனர்.
இதனிடையே, மாலத்தீவில் உள்ள மதுபாரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னரும், முன்னாள் வீரரும், டெலிவிஷன் வர்ணனையாளருமான மைக்கேல் சிலாட்டர் சண்டையிட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
முதலில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அது கைகலப்பாக மாறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதற்கு விளக்கமளித்த, சிலாட்டர் கூறும்போது, நானும் டேவிட் வார்னரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் சண்டை வருவதற்கான வாய்ப்பே இல்லை.
இதுமாதிரியான தகவல் எங்கிருந்துதான் வருகிறது என்று தெரிய வில்லை என்றார்.