தயிரோடு மறந்தும்கூட இந்த உணவுகளை சேர்த்துவிடாதீர்கள்.. ஆபத்தை விளைவிக்குமாம்!
தயிரில் இயற்கையிலேயே நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன. என்னதான் இயற்கையான உணவு என்றாலும், இதனுடன் இந்த குறிப்பிட்ட உணவு வகைகளை சேர்த்து சாப்பிட்டால், பக்கவிளைவுகளே அதிகம் ஏற்படும்.
உங்களுக்கு தயிர் வெங்காயம் அல்லது ரைத்தா மிகவும் பிடிக்கும் என்றால், நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை முதலில் மாற்றிக்கொள்வது மிகவும் நல்லது.
வெங்காயம், நமது உடலுக்கு வெப்பத்தை அளிக்கும். தயிர் வெங்காயம் போன்ற தயிரும் வெங்காயம் கலந்த கலவையை நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் பட்சத்தில், அது, தோல் அலர்ஜியை ஏற்படுத்தவல்ல உடல் அரிப்பு, எக்ஸிமா, சோரியாசிஸ் போன்ற குறைபாடுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடும்.
தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப்பொருள் ஆகும். இது மாடுகளில் இருந்து பெறப்படுவதால், இது விலங்கு புரத வகையை சேர்ந்தது ஆகும்.
மேலும், மீனில் அதிகளவில் புரதம் உள்ளது. இதுவும் விலங்கு வகை புரதம் ஆகும். எப்போதும் ஒரு விலங்கு வகை புரதத்துடன் இன்னொரு விலங்கு வகை புரதத்தையோ அல்லது தாவர வகை புரதத்துடன், இன்னொரு தாவர வகை புரதத்தையோ சேர்த்து சாப்பிடக் கூடாது.
இவை, நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தயிர் உடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன், வயிறு தொடர்பான உபாதைகளும் ஏற்படக் கூடும்.
பின்னர், பால் மற்றும் தயிர் மாடுகளில் இருந்தே பெறப்படுவதால், இவை இரண்டும் விலங்கு வகை புரதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, உப்பிசம் மற்றும் வாய்வுக் கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட காரணமாக அமைந்து விடும்.
தயிர் உடன் உளுந்தம் பருப்பினால் செய்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது செரிமானத்தில் பிரச்சினையை உருவாக்கி இறுதியில், வயிற்று உப்பிசம், வாய்வுக் கோளாறு, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது பேதி போன்ற மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.
நெய் தடவப்பட்ட புரோட்டா, சால்னா என்றால் யாருக்குத்தான் இங்கு பிடிக்காது. அந்தளவுக்கு அதன் சுவை நம்மை எல்லாரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளது.
எண்ணெய் மிக்க உணவுகள் உடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து சாப்பிடும் போது, அது செரிமானத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாது, நம்மை விரைவில் சோர்வு அடைய செய்துவிடுகிறது.
இதன் காரணமாகவே, எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்ட பிறகு, லஸ்ஸி போன்ற பானங்களை குடிக்கும்போது, வெகுவிரைவில் உறக்கம் நம்மை தழுவிக்கொள்வதற்கான காரணமும் இதுவே ஆகும்.